“இந்தியா முழுதும் தமிழ்நாட்டின் ஒளி பரவட்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு தின’ வாழ்த்து

தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு நாள்
Updated on
1 min read

சென்னை: தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு தின’ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று ‘தமிழ்நாடு தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக் கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று!

1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான திமுக ஆட்சியைப் பிடித்தது. தமிழ் நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதல்வரானார்; 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்!

மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in