அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை | எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பும் முயற்சி: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை | எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பும் முயற்சி: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனை, பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை திசைதிருப்பும் முயற்சியாகும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கோடு, பாஜக அரசு அமலாக்கத் துறையை ஏவிவிட்டு, கைது செய்தது. தற்போது அமைச்சர் பொன்முடி மீது குறிவைத்துள்ளது. இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தவும், பழிவாங்கவும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றை பாஜக பயன்படுத்தி வருகிறது.

பாஜகவை எதிர்த்து சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் 17 கட்சிகள் பங்கேற்றன. இன்றைக்கு 25 கட்சிகள் பெங்களூருவில் கூடியுள்ளன. எதிர்க்கட்சிகளுடைய ஒற்றுமையை சகித்துக்கொள்ள முடியாத பாஜக இவ்வாறு அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாக அமலாக்கத் துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீதும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே அமலாக்கத் துறையை மலிவான செயலுக்கு மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: 2011-12-ம் ஆண்டுகளில் பொன்முடி மேல் போடப்பட்ட வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அமலாக்கத் துறை மூக்கை நுழைத்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்களிடையே திமுக அமைச்சர்கள் குறித்த ஒரு களங்கத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். பாஜகவின் இந்த முயற்சி வெற்றிபெறாது. எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் நிலையில், அதை திசை திருப்பும் நோக்கத்தில் திட்டமிட்டே இந்த சோதனை நடத்தப்படுகிறது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையின் வாயிலாக மிரட்டி, ஆட்சியாளர்களைப் பணிய வைக்கலாம் என பாஜக முயன்று வருகிறது. பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டம் நடைபெறும் தினத்தில் அமலாக்கத் துறை இச்சோதனையை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in