

சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்திமண்டப வளாகத்தில் உள்ள செண்பகராமன், சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம் ஆகியோரது படங்களுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கரலிங்கனார், செண்பகராமன், ஆர்யா (எ) பாஷ்யம் ஆகியோரது தொண்டைப் போற்றும்வகையில், ஆண்டுதோறும் ஜூலை 17-ம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி, தியாகிகள் தினத்தை முன்னிட்டு, கிண்டிகாந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் மணிமண்டபத்தில், செண்பகராமன், சங்கரலிங்கனார், பாஷ்யம் ஆகியோரது படங்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ பிரபாகர் ராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித் துறை இயக்குநர் த.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.