ராமஜெயம் கொலை வழக்கு | விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமஜெயம் | கோப்புப்படம்
ராமஜெயம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ல் திருச்சியில் நடைபயிற்சி சென்ற போது மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீஸாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து 12 ஆண்டுகளாகிவிட்டது. பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை செய்துவிட்டன. இந்நிலையில், நியாயம் கிடைக்கும் என இன்னும் நம்பிக்கை இருக்கிறதா என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தியளிக்கிறது. நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஆயிரத்து 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை தொடர அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், விசாரணையை முடித்து கூடிய விரைவில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in