அமுதம் அங்காடி, ரேஷன் கடையில் குறைந்த விலையில் தக்காளி, துவரம் பருப்பு விற்பனை தொடக்கம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

அமுதம் அங்காடி, ரேஷன் கடையில் குறைந்த விலையில் தக்காளி, துவரம் பருப்பு விற்பனை தொடக்கம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு விநியோகிக்க ரூ.928.27 கோடியில் துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அமுதம் அங்காடி மற்றும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் தக்காளி, துவரம் பருப்பு, உளுந்து விற்பனை தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 928 கோடி ரூபாய் மதிப்புக்கு பாமாயில்மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை: வெளிச்சந்தையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டு, கடந்த 2007-ம் ஆண்டுமுதல் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் துவரம் பருப்பு, பாமாயில்குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்துக்கு மாதம் 10 ஆயிரம் டன் கோதுமை, 10 ஆயிரம் டன் துவரம் பருப்பு ஒதுக்கும்படி தெரிவித்திருந்தார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 40 ஆயிரம் டன் துவரம் பருப்பு ரூ.464.79 கோடிக்கும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் ரூ.463.48 கோடிக்கும் என ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ரேஷன்கடைகள் மூலம் தாக்காளி ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 7 அமுதம் அங்காடிகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 7 ரேஷன் கடைகளிலும் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கும், துவரம் பருப்பு அரை கிலோ ரூ.75-க்கும், உளுந்து அரை கிலோ ரூ.60-க்கும் விற்கப்படுகின்றன.

இதற்குத் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. குடிமைப்பொருள் குற்றப் புலானய்வுத் துறை மூலமும், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படாமல் இருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in