திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம்: இந்து முன்னணி தலைவர் தகவல்

திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம்: இந்து முன்னணி தலைவர் தகவல்
Updated on
1 min read

சென்னை: இந்துக்களுக்கு விரோதமாக தமிழக அரசு செயல்படுவதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் நாளை தெருமுனை பிரச்சாரம் நடத்த இருப்பதாக மாநில தலைவர் காடேஸ்வரர் சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் காடேஸ்வரர் சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பிரபலமான கோயில்களை பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சித்தரித்து இந்து ஆன்மிக சிந்தனைகளைச் சீரழிக்கவும், கோயில் புனிதத்தை கெடுக்கவும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், தொழில் செய்வதுபோல், வந்து கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோதமாக அதிகளவில் தங்கி உள்ளனர். அவர்கள் அனைவரும், வாரத்தில் ஒருநாள் மொத்தமாக சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வரும் காலங்களில் பெரிய அளவில் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாக கோயில்களை சேதமடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. உளவுத் துறை இதனை சரியாகக் கண்காணித்து அவர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

கோயில் வருமானத்தை இந்து சமய அறநிலையத் துறை முறையாகக் கணக்கு காட்டுவதில்லை. அதிகளவில் லஞ்சம், ஊழல் அறநிலையத் துறையில் தான் நடக்கிறது. எனவே, இந்துக்களுக்கு விரோதமாக தமிழக அரசு செயல்படுவது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வரும் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயலாளர் டி.மனோகர், மாநகர தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in