Published : 14 Jul 2023 04:17 PM
Last Updated : 14 Jul 2023 04:17 PM

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

எஸ்.வி.சேகர் | கோப்புப்படம்

சென்னை: நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெண் பத்ரிகையாளர் வழக்கு: நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபர்த்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

தேசியக் கொடி வழக்கு: அதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் கடந்த 2020-ம் ஆண்டு ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்தார். இதன்படி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எம்ஜிஆர் சிலைக்கு காவி சால்வை போர்த்திய செயலை களங்கம் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியதால், அதற்கு நான் சில கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டேன். ஆனால், ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. எனவே எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x