குறைந்த விலையில் தக்காளி விற்பனை: மதுரையில் தோட்டக்கலைத் துறை தொடக்கம்

குறைந்த விலையில் தக்காளி விற்பனை: மதுரையில் தோட்டக்கலைத் துறை தொடக்கம்
Updated on
1 min read

மதுரை: வெளி மார்க்கெட்டை விட குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்வதை தோட்டக்கலைத் துறை தொடங்கியுள்ளது.

தற்போது தக்காளி விலை கிலோ ரூ.100-க்கு மேல் உள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை மூலம் நேரடியாக விவசாயிகளிடம் தக்காளியை கொள்முதல் செய்து உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மதுரையில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கப்பட்டது.

சொக்கிகுளம், அண்ணா நகர் உழவர் சந்தைகள் உட்பட அனைத்து நகரப் பகுதிகளிலும் தோட்டக்கலைத் துறை மூலம் 1.25 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ரேவதி கூறுகையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.117 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. மதுரையில் வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனையாகிறது.

உழவர் சந்தைகளில் தோட்டக்கலைத் துறை மூலம் முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு கிலோ ரூ.90 முதல் ரூ.95 வரை தக்காளி விற்னை செய்யப்படுகிறது என்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in