Published : 08 Jul 2023 06:07 AM
Last Updated : 08 Jul 2023 06:07 AM
சென்னை: திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. இதில், ஒருவர் இறந்தார். அவரதுகுடும்பத்தினர் காயம் அடைந்துள்ளனர். கார் ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கம் எம்ஜிஆர் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் திருநாவுக்கரசு (60). இவர் தனது குடும்பத்தினருடன் சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாடகை காரில் சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு அதே காரில் சென்னை திரும்பினார்.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ரஞ்ஜித் (29) என்பவர் காரை ஓட்டினார். திருநாவுக்கரசு முன் இருக்கையில் அமர, அவரது மனைவி செல்வி (55), மகள் பாரதி (33), பேத்தி யாழினி (4), பேரன் யாத்விக் (4) ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கார் வீட்டுக்கு அருகே சில கி.மீ. தூரத்தில் ஈஞ்சம்பாக்கத்தில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த சுவர் மீது மோதியது.
இதில், திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே இறந்தார். பின் இருக்கையிலிருந்த அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர். கார் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுபோலீஸார் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திருநாவுக்கரசு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT