Published : 07 Jul 2023 06:36 AM
Last Updated : 07 Jul 2023 06:36 AM

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவன ஓட்டுநர்கள் பணியில் சேர்ப்பு: தொழிற்சங்கத்தினர் கண்டனம்

சென்னை: தனியார் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். இதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

சென்னை, மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பேருந்துகளை நிறுத்துதல், டீசல் நிரப்புதல் போன்ற பணிகளை 532 பணிமனை ஓட்டுநர்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு சாலையில் பேருந்துகளை இயக்குவதற்கான பணியை வழங்கி, அவர்கள் செய்து வந்த பணியை ஒப்பந்த நிறுவனங்களின் ஓட்டுநர்கள் மூலம் மேற்கொள்ள மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை கடந்த ஆண்டு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது. டெண்டர் இறுதி செய்யும் நேரத்தில் மாநகர போக்குவரத்துக் கழகத்தை முற்றுகையிட்டு, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து டெண்டர் முடிவு அறிவிக்கப்படாது என நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் சில மாதங்களிலேயே தேர்வான நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.

மேலும், ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம்முதல் பணியில் இணைவதாகத் தகவல் வெளியானது. இவ்வாறு அடுத்தடுத்த நகர்வுகளில் தொடர்ச்சியாகத் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர். எனினும், தற்போது படிப்படியாக பணிகள் நிறைவடைந்து நேற்றுமுதல் பணிமனை ஓட்டுநர் பணியில், ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இணைந்தனர். இதற்கு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன்: தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிக்கும் மாநகர போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கையை தொமுச உள்ளிட்ட சங்கங்கள் கண்டித்ததையடுத்து, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. எனவே, அதிமுக பொதுச்செயலாளர் அனுமதியைப் பெற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

சிஐடியு சங்கம்: நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. இது போன்ற நடவடிக்கையைக் கண்டித்தே வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினோம். அதன் மீதான பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைத்தோம்.

ஆனால் நிர்வாகம் தொழிலாளர் நலத் துறையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து மீறி வருகிறது; இது கண்டிக்கத்தக்கது. இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். எப்போதும் போல் வேலைவாய்ப்புத் துறை மூலமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாநகர போக்குவரத்துக் கழகத்தைக் கண்டித்து சில பணிமனைகளில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x