Published : 06 Jul 2023 06:43 AM
Last Updated : 06 Jul 2023 06:43 AM

குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டது; மருத்துவமனை சிகிச்சையில் தவறில்லை - விசாரணை அறிக்கையில் தகவல்

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறில்லை. குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே கை அகற்றப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் முகமதுமகிர். சென்னை ராஜீவ்காந்தி அரசுபொது மருத்துவமனையில் சமீபத்தில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் வலதுகை கறுப்பாக மாறியதுடன் செயலிழந்து, அழுகி யது. பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தையின் வலதுஅகற்றப்பட்டது.

இதற்கிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விரிவானவிசாரணை நடத்த மருத்துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் என்.ஸ்ரீதரன், பொது அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் பி.எஸ்.சாந்தி, ரத்தவியல் பிரிவு மற்றும் குழந்தைகள் நலத்துறை தலைவர் சி.ரவிசந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக் குழு விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: ஒன்றரை வயதான குழந்தை முகமது மகிர், குறைந்த எடையுடன் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை. தற்போது தீவிர எடை குறைவுடனும், இருதயத்தில் ஓட்டையுடனும், தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மூளை மண்டலத்தில் உள்ள நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு தலைவீக்கத்தால் அவதிப்பட்டு வந்ததுள்ளது.

முகமது மகிர் 5 மாத குழந்தையாக இருக்கும்போது, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வி-பி ஷண்ட் என்று சொல்லப்படும் ஓர் அறுவை சிகிச்சை மூலம் மூளை மண்டலத்தில் இருந்து வயிற்றுப் பகுதிக்கு ஒரு நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குழந்தைக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சை மூலம் குழந்தை குண மடைந்துள்ளது.

வி-பி ஷண்ட் குழாயில் பிரச்சினை ஏற்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜூன் 25-ம் தேதி மாலை 3.58 மணிக்கு குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. உடனே இருதயவியல், மயக்கவியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சையில் குழந்தைக்கு ஆபத்துகள் நேரலாம் என்று குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரிடம் சம்மதம் பெற்று, அன்று இரவே அறுவை சிகிச்சை செய்து ஆசனவாய் வழியாக புதிய வி-பி ஷண்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் இருந்த குழந்தைக்கு வாய் வழியாக உணவு அளிக்கப்பட்டு, நரம்பு வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. ஷண்ட் குழாயை ஆய்வு செய்ததில் நுண் கிருமி இருப்பது ஜூன் 28-ம் தேதி தெரியவந்தது. மேலும், குழந்தைக்கு மூளைத் தொற்று இருப்பது உறுதியானது.

ஜூன் 29-ம் தேதி குழந்தையின் வலது கையில் சிவப்பு நிறம், வீக்கம் ஏற்பட்டதை, பணியில் இருந்த செவிலியரிடம் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ மாணவரும் அன்று இரவு குழந்தையை பரிசோதித்துள்ளார். 30-ம் தேதி சிரை நாளங்களின் அழற்சி ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்த மருத்துவர்கள், அதற்கான சிகிச்சையை அளித்துள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி கையின் நிறமாற்றம் அதிகரித்து, கை அசைவும் குறைந்து, ரத்த ஓட்டம் குறைந்ததை பரிசோதனையில் கண்டறிந்த மருத்துவர், ரத்த நாளப் பிரிவு மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெற்றுள்ளார். பின்னர், பரிசோதனை மூலம் ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதும், கையின் தசைகள் முற்றிலும் செயலிழந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

வலது கையை காப்பாற்றுவது கடினம். அதேநேரத்தில் அந்தக் கையை உடனடியாக அகற்றாவிட்டால் உயிர் பாதிப்பு ஏற்படும் என்பதால், அன்று மாலையே குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, செயலிழந்த வலது கை அகற்றப்பட்டுள்ளது.

குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு கையில் வென்ஃப்ளான் ஊசி தமனியில் போடவில்லையென்று பெற்றோர், மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதியாகிறது. மருந்து கசிவினால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிறமாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்துள்ளனர். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர் ரத்த உறைவுக்கு சிகிச்சை அளித்துள்ளார். ரத்தநாள அடைப்பு, செலுத்தப்பட்ட மருந்து, மற்ற சிகிச்சைகளால் ஏற்படவில்லை. கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டு உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம் அரசியலாக்கப்படுகிறது: அமைச்சர் கருத்து

சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் அரசியல், பதற்றம் ஆக்கப்படுகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியைவிட தற்போதைய திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுரி அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 11 குழந்தைகள் இறந்தது. இதுபோன்ற பல சம்பவங்கள் உள்ளன. ஆனால், ஒன்றில்கூட விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்ததில்லை. அதிமுக ஆட்சியில் எது நடந்தாலும் மூடி மறைக்கப்படும்.

ஆனால், குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மூன்று மருத்துவர்கள் குழு அமைத்து விசாரணை நடத்தி முறையான அறிக்கை கொடுத்துள்ளனர். பெற்றோர் தரப்பு வேண்டுமென்றால் நீதிமன்றம்செல்லலாம். தனியார் மருத்துவர்களை அழைத்து வந்து குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்யலாமென தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x