

சென்னை: தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், தற்காலிக ஊழியர்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் நுழைவதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.‘‘சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திர எழுத்தர்கள், இடைத்தரகர்கள் செயல்பாடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பத்திர எழுத்தர்கள் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சார் பதிவாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அடுத்த கட்டமாக வருவாய்த் துறையிலும் இதற்கான அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், தாலுகா அலுவலகங்களில் இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ், பட்டா மாற்றம் போன்றவற்றை பெற்றுத் தருவதாகவும், தற்காலிகப் பணியாளர்கள் போர்வையில் பொதுமக்களிடம் பணம் பெற்று, பல்வேறு சேவைகளை பெற்றுத் தருவதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய சுற்றறிக்கை: தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களுக்குள் இடைத்தரகர்கள், தற்காலிக ஊழியர்கள் என தனி ஆட்கள் யாரும் உள்ளே வந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. இதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். இதைக் கண்டிப்புடன் பின்பற்றுவதுடன், கீழ்நிலை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.