மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 11-ல் ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 11-ல் ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் முடிவு
Updated on
1 min read

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா. பெரியசாமி, மு.வீரபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும், தமிழக மக்களின் விருப்பத்துக்கும் எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநர் ஆர். என். ரவியை பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணை ஆற்றுப் பிரச்சினை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நீடிப்பதால், இதற்கு சட்டப்பூர்வமாக தீர்வு காண தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடியை பாதுகாக்க ஜூனில் வழங்க வேண்டிய 9.1 டிஎம்சி தண்ணீரை முழுமையாக கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

மணிப்பூர் மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜூலை 11-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in