அறங்காவலர் மீது முறைகேடு புகார்: 12 வாரத்தில் விசாரித்து முடிக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

அறங்காவலர் மீது முறைகேடு புகார்: 12 வாரத்தில் விசாரித்து முடிக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: முறைகேட்டில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செயப்பட்ட கோயில் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த கோபி முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்பதற்காக அறங்காவலர் என்ற முறையில் கோபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அளித்த பொய் புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், போதிய விளக்கம் கேட்காமல் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அறங்காவலர் கோபி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி 12 வாரங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in