

சென்னை: காசிமேட்டில் பெரிய மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினர். எனினும், விலை குறையாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த, ஏப்.15-ல் தொடங்கி ஜூன் 14-ம் தேதியுடன் முடிந்தது.சென்னை காசிமேட்டில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன்வாங்க அதிக அளவில் மக்கள் குவிவார்கள். மீன்பிடி தடைக்காலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக குறைவான கூட்டமே காணப்பட்டது.
தடைக்காலம் முடிந்ததையடுத்து கடந்த 14-ம் தேதி நள்ளிரவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக் கிழமையான கடந்த வாரம், அதிக அளவிலான பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிறிய வகை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இந்நிலையில், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேற்று பெரியவகை மீன்கள் அதிகம் விற்பனைக்கு வந்தன. அதிகாலை முதலே பொதுமக்கள், வியாபாரிகள் மீன் வாங்க குவிந்ததால் காசிமேட்டில் கூட்டம் அலைமோதியது.
பெரிய வகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், மீன்களின் விலை குறையாததால், வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து, மீனவர்கள் கூறும்போது, ‘‘ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் கடந்த வாரத்தைவிட கூடுதலாக கரை திரும்பியதால் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அடுத்த வாரத்தில் இன்னும் கூடுதலாக மீன்கள் வரும் என்பதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
காசிமேட்டில் நேற்று வஞ்சிரம் கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200,சங்கரா ரூ.300 முதல் ரூ.500, இறால் ரூ.400 முதல் ரூ.1,200, வவ்வால் ரூ.300 முதல் ரூ.600, கடமா ரூ.600, பாறை ரூ.400 முதல் ரூ.500, நெத்திலி ரூ.150 முதல் ரூ.300 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.