

விழுப்புரம்: ‘இ -சேவை மையம் மூலம் வாரிசு சான்றுக்கு விண்ணப்பிக்கலாமா?’ என்று நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் விழுப்புரம் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக வருவாய்துறையினர் அளித்த விவரம் இதோ...
ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் 'இ- சேவை' மையங்கள் செயல்படுகின்றன. இங்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கின்றனர்.
தற்போது பள்ளி, கல்லுாரி சேர்க்கை நடைபெறும் காலம் என்பதால் மாணவர்கள் இச்சான்றிதழ்களை வாங்க 'இ- சேவை' மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் கவனத்துடன், உடனுக்குடன் சான்றுகளை தருமாறு இதற்கான அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. 'இ- சேவை' மையங்களில் வரும் விண்ணப்பங்கள் விஏஓ, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியருக்கு இணைய தளம் மூலம் அனுப்பப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்குப் பிறகு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. முன்பு நேரடியாக அதிகாரிகளை சந்தித்து சான்றிதழ் பெற்று வந்த நிலை இருந்தது. இதில் அலைச்சல், கையூட்டு போன்றவைகளைத் தவிர்க்க ஆன்-லைன் உதவியுடன் 'இ- சேவை' மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்த ‘இ சேவை’ மூலம் வாரிசு சான்றுக்கு விண்ணப்பிக்கலாம். எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல் இருந்தால், உரிய கள ஆய்வுக்குப் பின் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.