மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: 'மாமன்னன்' திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், இந்த படம்தான் தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

'ஏஞ்சல்' படத்துக்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 'ஏஞ்சல்' படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.
'ஏஞ்சல்' படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார்.

எனவே, 'ஏஞ்சல்' படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் வரும் ஜூன் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in