

தஞ்சாவூர்: தமிழக ஆளுநர் தன்னுடைய போக்கை கைவிடாவிட்டால், அவரை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் இன்று காலை கூறும்போது, “ வள்ளலார் குறித்து தமிழக ஆளுநர் கூறிய கருத்து அவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. சனாதனம், மதவெறி, சாதி பேதம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். இந்நிலையில், சனாதனத்தின் உச்சம் வள்ளலார் எனக் கூறி, அவர் மீது காவியை போர்த்தியுள்ளார். இதே போல இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸ் தவறாக பேசியிருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த மாதிரியான போக்கை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநரை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
பாஜக 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவவுள்ளது. இந்நிலையில் எவ்வளவு கூறினாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் புறக்கணிப்பு, மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு போன்ற கொள்கைகளில் ஈடுபடும் பாஜகவுடன் துணை போவது தமிழ்நாட்டுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என அதிமுகவினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ரூ. 122 கோடி முறைகேடு நடத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தகவல் சேகரித்து கூட்டுறவு துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளது. இந்த மிகப்பெரிய முறைகேடு குறித்து தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தற்போது, 500 மதுக்கடைகளைத் தமிழக அரசு மூடியிருப்பதை வரவேற்கிறோம். இதேபோல படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்களையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
குறுவை சாகுபடிக்கு கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் மட்டுமல்லாமல், தேவையான அளவுக்கு பயிர்க்கடனும் வழங்க வேண்டும். இதேபோல, நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த முன் வராவிட்டால், தமிழக அரசே அதை ஏற்று நடத்த வேண்டும் என்றார்” பாலகிருஷ்ணன்.
அப்போது, மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன், மாநகரச் செயலர் எம்.வடிவேலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.