ராமேசுவரம் மீனவர்களுக்கு ஒரே நாளில் 4 லட்சம் கிலோ மீன்கள்: உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றம்

ராமேசுவரம் மீனவர்களுக்கு ஒரே நாளில் 4 லட்சம் கிலோ மீன்கள்: உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றம்
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீன்பிடி தடைக் காலம் முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற விசைப் படகு மீனவர்களுக்கு, ஒரே நாளில் சுமார் 4 லட்சம் கிலோ மீன்கள் கிடைத்தன. ஆனால், உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர்.

மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14-ம் தேதியுடன் முடிவடைந்ததால், கடந்த 15-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். ஜூன் 16-ம் தேதி மாலை 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3,500 மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றனர்.

இவர்கள், ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்குத் திரும்பத் தொடங்கினர். இந்த விசைப் படகு மீனவர்களுக்கு சுமார் 2.50 லட்சம் கிலோ இறால்களும் மற்றும் கணவாய், நண்டு, இதர மீன்கள் 1.50 லட்சம் கிலோ வரையிலும் என மொத்தம் 4 லட்சம் கிலோ மீன்கள் கிடைத்துள்ளன.

அதிகளவில் மீன்கள் கிடைத்ததால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால், உரிய விலை கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்ற மடைந்தனர். வியாபாரிகள், ஏற்றுமதி யாளர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு மீன்களை விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், அரசு சார்பில் ராமேசுவரம் பகுதியில் மீன் சேமிப்பு மற்றும் பதனிடும் கிடங்கு அமைக்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in