Published : 17 Jun 2023 06:41 PM
Last Updated : 17 Jun 2023 06:41 PM

சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்: வீடு வீடாக சென்று 50,000 பேரிடம் கருத்து கேட்க திட்டம் 

சென்னை: சென்னைக்கான புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக, வீடு வீடாக சென்று 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் (Comprehensive Mobility Plan) தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

குறிப்பாக, இந்தப் போக்குவரத்து திட்டம் குறைந்த கார்பனை வெளியிடும் வகையிலும், குறைந்த அளவு காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்படும். மேலும் மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், கரோனா போன்ற பெருந்தொற்று ஆகிய காலங்களில் எந்தத் தடையும் இன்றி செயல்படும் வகையிலான மீள் திறனுடன் (Resilient) வகையில் இருக்கும். இதைத் தவிர்த்து அனைவரும் எளிதில் அணுகும் வகையிலும், நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற வகையிலும், சாலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக இது இருக்கும்.

இந்தத் திட்டத்தை தயார் செய்யும் பணிக்கான ஒப்பந்தம் SYSTRA Ltd என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக 50 ஆயிரம் பேரிடம் வீடு வீடாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகருக்கு புதிய போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இதில் இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல், சாலை விபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவை தொடர்பான விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முதல் கட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம், டெல்லியில் உள்ள School of Planning and Architecture நிறுவனத்தின் முதல்வர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், சிஎம்டிஏ, சென்னை மெட்ரோ ரயில், எம்டிசி உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் 50 ஆயிரம் பேரிடம் வீடு வீடாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பழைய சென்னையில் 30 ஆயிரம் பேரிடமும், தற்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் 20 ஆயிரம் பேரிடமும் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரைவு அறிக்கை தயார் செய்யப்படும். வரைவு அறிக்கையின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x