சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

சீமை கருவேல மரங்கள்
சீமை கருவேல மரங்கள்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு மேலும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்புக்கும் மேலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சீமை கருவேல மரங்கள் அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் தான் அவை மீண்டும் வளராமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக குழுக்கள் அமைக்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்துவது என அரசு கொள்கை முடிவு எடுத்த போதும், அதுசம்பந்தமாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்பதால் உண்மையில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா என நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி உரிய குழுக்கள் அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குழுக்கள் அமைத்தது குறித்து ஜூலை 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in