

காரைக்குடி: மக்கள் அனுதாபத்தை பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாட வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''எட்டு நாட்கள் நடைபெற்ற வருமான வரித் துறையினர் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஆதாரம் திரட்டிய பின்னர் எடுக்கப்பட்ட சட்டபூர்வமான நடவடிக்கை. நீதிமன்றம் மூலம் அவர் தன்னை குற்றமற்றவர் என நிருபித்துக் கொள்ளலாம்.
தேர்தலை மனதில் வைத்து திமுக மக்களின் தயவை பெற விரும்புகிறது. மத்திய அரசுக்கு எதிராக பேசினால் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றனர். டாஸ்மாக் மது கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் விற்று கொள்ளையடிக்கின்றனர். முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். அவர் மக்கள் அனுதாபத்தை பெற நாடகமாட வேண்டாம். செந்தில்பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் உயர்தர உயிர் காக்கும் சிகிச்சை வழங்க வேண்டும்.
நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் தமிழக மாணவர்கள் நீட் வேண்டும் என்பதை உணர்ந்துள்ளனர்'' என்று அவர் கூறினார்.