NExT Exam | கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, NExT தேர்வு முறையினைக் கைவிட வேண்டும்" என வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வினை ஒன்றிய அரசு கைவிடவேண்டும்” என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, NExT தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in