பெண் சிசு கொலை: தாய், பாட்டி கைது

பெண் சிசு கொலை: தாய், பாட்டி கைது
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (38). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர். இவரது மனைவி வனிதா (29). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த 7-வது நாளில் அந்த குழந்தைக்குத் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. முதலில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் குழந்தை 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி இறந்துள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், எலி விஷம் கொடுக்கப்பட்டதால் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து வனிதா, அவரது தாயார் அமுதா (52) ஆகியோரை பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். குழந்தை இறந்த அன்று, குப்பன் வெளியூரில் இருந்ததால் சம்பவம் குறித்து தெரியாது என விசாரணையில் கூறியுள்ளார். இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in