ஒடிசாவில் இருந்து கடைசி நபர் வரும் வரை தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: தமிழக அமைச்சர்

சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த பயணிகளுக்கு ஆறுதல் தெரிவித்து, மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன். உடன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்.
சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த பயணிகளுக்கு ஆறுதல் தெரிவித்து, மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன். உடன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்.
Updated on
2 min read

சென்னை: ஒடிசாவில் இருந்து கடைசி நபர் வரும்வரை தேவையான உதவிகள் செய்யப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்கள், சிறப்பு ரயில் மூலம் நேற்று காலை சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர்கள் சாத்தூர் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின், சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுசெய்த அமைச்சர் ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் 1,175 பேர். உயிரிழந்தவர்களில் இதுவரை 70 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் யாரும் இல்லை. மற்ற உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் யாரையும் காணவில்லை என எங்களுக்கோ, ரயில்வே துறையினருக்கோ புகார்கள் வரவில்லை. ஒடிசாவில் இருந்து புறப்பட்டு இன்று (நேற்று) வந்த சிறப்பு ரயிலில் 137 பேர் வந்தனர். அதில் காயமடைந்த 29 பேரில் 4 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் வெளியில் சென்றுவிட்ட நிலையில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒடிசாவில் இருந்து இன்று (நேற்று) புறப்பட்டுள்ள மற்றொரு சிறப்பு ரயில் திங்கள்கிழமை சென்னை வந்து சேரும். அங்கிருந்து கடைசி நபர் வந்து சேரும் வரை தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேல் சிகிச்சை தேவைப்படுவோரை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்த<br />ஆம்புலன்ஸ் வாகனங்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்
மேல் சிகிச்சை தேவைப்படுவோரை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்த
ஆம்புலன்ஸ் வாகனங்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

மருத்துவக் குழு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒடிசா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருந்தோம். மேலும், 305 மருத்துவர்களும் தயாராக இருந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் மருத்துவக் குழு தயாராக இருந்தது. சிறப்பு ரயிலில் வந்த 137 பேரில், 8 பேருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டிருந்தது. இவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கார்த்திகேயன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இவர்கள் ரயிலில் இருந்து இறங்கியவுடன் மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினர். மேல்சிகிச்சை தேவைப்பட்டவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைப் பின்னர் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, சென்னை விமான நிலையத்திலும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தனர்.

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு, சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு<br />வந்த பயணிகளை, சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் சென்ற மருத்துவக் குழுவினர்.
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு, சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு
வந்த பயணிகளை, சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் சென்ற மருத்துவக் குழுவினர்.

சிறப்பு ரயில்: ரயில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்கும் வகையில், சென்னை சென்ட்ரல்-புவனேஸ்வருக்கு இன்று (ஜூன் 5) இரவு 7.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. காயமடைந்த பயணிகளின் உறவினர்கள், சிறப்பு பாஸ் பெற்று இதில் பயணிக்கலாம். இதுபோல, ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்து இருந்தவர்களும் இதில் பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பயணிகள் நலம்: இதற்கிடையில், விபத்துக்குள்ளான ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தவர்களின் பட்டியலைப் பெற்று, அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் மற்றும் தமிழக இருப்பிட முகவரி அளித்திருந்த 127 பேரை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினர் தொடர்பு கொண்டனர். விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பெரிய அளவில் காயமடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. அனைவரும் நலமாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in