

கோவை: கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து குடிநீர் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினர் ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கோவையில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2-ம் தேதி பல செவிலியர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு சுகாதாரத் துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் முகாம் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறியதாவது: 3 நாட்கள் நடைபெற்ற பரிசோதனை முகாமில் மொத்தம் 81 செவிலியர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். மாசுபட்ட குடிநீரால் பிரச்சினை ஏற்பட்டதாக சந்தேகிப்பதால், மருத்துவமனையில் குடிநீர் வழங்கும் இடங்களில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.
இதேபோல, அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஆய்வின் முடிவில்தான் எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவரும். குடிநீர் வழங்கும் தொட்டிகளில் இருந்த நீர் அகற்றப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.