

நயினார் நாகேந்திரன்
சென்னை: “தென்காசியில் உள்ள கோயில் நிலத்தில் சுமார் 10 டன் எடையுள்ள கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த கழிவுகளை உடனடியாகக் கேரளாவிற்கே திருப்பி அனுப்பி, சட்டவிரோதக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தென்காசி கீழக்கடையத்தில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தில் சுமார் 10 டன் எடையுள்ள கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாக நினைக்கும் அண்டை மாநிலத்தின் போக்கையும், அதைத் தடுக்கத் தவறிய தவெக அரசின் மெத்தனத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இங்கு வீசப்பட்டுள்ள மூட்டைகளில் மலையாள எழுத்துகளும், கேரள வாகன எண்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக், மின்னணுக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளால் ஜம்பு நதியும், விளைநிலங்களும், நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்லைக் கண்காணிப்பிலும், கோயில் நிலங்களைப் பாதுகாப்பதிலும் தவெக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.
எனவே, இந்த 10 டன் கழிவுகளையும் உடனடியாகக் கேரளாவிற்கே திருப்பி அனுப்ப அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும், சட்டவிரோதக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.