

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என மூன்று மதத்தவரும் சகோதரர்களாக உடன்பட்டு வாழும் ஓர் ஊர் உடன்குடி. கடற்கரையை ஒட்டிய செம்மண் தேரியாகவிளங்கிய மிகப்பெரிய கிராமம், இன்று தேர்வு நிலைப் பேரூராட்சி. திருச்செந்தூரிலிருந்து 15 நிமிடம் பயணித்தால் 12 கிலோ மீட்டர் தொலைவில் வந்துவிடுகிறது.
இன்றைக்கும் உடன்குடி என்கிற ஊரின் பெயரைக் கேட்டதும் நாவில் இனிப்புச் சுவையூறும். காரணம், உலகப் புகழ்பெற்ற, புவிசார் குறியீடு பெற்றுள்ள ‘உடன்குடி கருப்பட்டி’.
உடன்குடியின் பெயரால் அழைக்கப்பட்டாலும் இந்த ஊரைச் சுற்றியுள்ள தாண்டவன் காடு, குளசை, மாதவன் குறிச்சி உள்ளிட்டபத்துக்கும் அதிகமான கிராமங்களும் செம்மண்தேரிகளில் கூட்டம் கூட்டமாக நிற்கும் பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்கிக் காய்ச்சப் படும் சுவையான கருப்பட்டி ‘உடன்குடி’யின் பெயரால் உலகப் புகழ்பெற்றிருக்கிறது.
உணவே மருந்து என்பதில் கருப்பட்டிக்கு எப்போதும் முதலிடம்தான். ஏனென்றால் இதன் கிளைசமிக் இண்டெக்ஸ் எண் 35 (Glycemic Index - GI). இது வெள்ளைச் சர்க்கரையைவிட (65) கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
வெள்ளைச் சர்க்கரையைவிட இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகளும் கருப்பட்டியில் உள்ளன. திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் அன்றாடம்.
கருப்பட்டி காபி இல்லாமல் புலராது. இன்றைக்கும் இங்கே கறுப்புக் காபியும் சுக்குக்காபியும் கருப்பட்டி கலந்தே தயார் செய்யப்படு கின்றன. அதேபோல் கருப்பட்டி மிட்டாயும் சுக்குக் கருப்பட்டியும் தமிழர் உணவுப் பண்பாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றன.