

திற்பரப்பு அருவி கோதையாறு மலையிலிருந்து இறங்கி வரும்போது, சுமார் 50 அடி உயரத்திலிருந்து ஒரு பெரும் பாறைப் பரப்பின் மேல் சரிந்து விழுகிறது. செங்குத்தாக விழாமல், ஒரு சரிவான பாறையின் மேல் அகலமாக விரிந்து விழுவதால், பாதுகாப்பாக நின்று குளிப்பதற்கு இது மிகவும் உகந்த இடமாக இருக்கிறது.
இதன் நீர் பேச்சிப்பாறை அணையிலிருந்துதான் வருகிறது. அதனால் பேச்சிப்பாறை அணையைத் திறந்து விடவில்லை என்றால், அருவியில் தண்ணீர் வராது. தண்ணீர் அதிக அளவில் திறந்து விட்டுவிட்டால், அருவியிலும் வெள்ளம் கரைபுரண்டோடும். அப்போதும் குளிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
40-45 ஆண்டுகளுக்கு முன் காட்டிற்குள் அருவி மட்டுமே இருக்கும். கடை எதுவுமே கிடையாது. அருவியிலிருந்து வரும் தண்ணீர் ஆறாக ஓடும். மறுபுறம் ரப்பர் மரக்காடுகள். கூட்டமும் பெரிதாக இருக்காது.
விடுமுறை நாள்களில் கொஞ்சம் ஆள்கள் வருவார்கள். அருகிலிருக்கும் மண்டபத்தில்தான் ஆடை மாற்றிக்கொள்ள வேண்டும். மண்டபத்தில் தரையில் இருக்கும் கற்களில் மலையாள எழுத்துகள் பொறித்து இருக்கும்.
இப்போது இந்த மண்டபத்தின் அருகே நீச்சல் குளம், சிறுவர் பூங்கா எல்லாம் வந்துவிட்டன. உடைமாற்ற அறைகள் உள்ளன. பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப் பெட்டக வசதி உள்ளது.