

சூரியன் கிழக்கே உதித்தால்தான் மொட்டுகள் மலர்களாகக் கண் விழிக்கும். ஆனால், சூரியன் உறங்கும் வேளையில் அதிகாலை 3 மணிக்கெல்லாம் கண் விழித்துவிடுகிறது ‘தோவாளை’ மலர்ச் சந்தை. கன்னியாகுமரியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள சற்றுப் பெரிய ஊராட்சிதான் இந்தத் தோவாளை.
மொழிவாரி மாநில எல்லைப் பிரிப்புக்கு முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது ‘தோவாலா’ என்று அழைக்கப்பட்டது. மலையாளிகளுக்கும் தோவாளை மலர்ச் சந்தைக்குமான கலாச்சாரப் பந்தத்தின் வரலாறு 200 ஆண்டுகளைக் கடந்த ஒன்று.
கொல்கத்தாவில் உள்ள மல்லி காட் மலர்ச் சந்தை போல் ஒரு சில பெரிய மலர்ச் சந்தைகள் மட்டுமே வட இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், நான்கு தென் மாநிலங்களின் மலர்த் தேவையை ஈடு செய்வதில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மலர்ச் சந்தையாகப் பெயர் பெற்று விளங்குகிறது தோவாளை. நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழிக்கு அருகே அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஊர்.