

சர்வசித்து வருடத்து வைகாசி. ஞாயிற்றுக்கிழமை ஒன்றின் இளமதியம். ஊடகவியல் நண்பர் சுப்பையா என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நான் பிரபலத் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையின் நிகழ்ச்சித் தயாரிப்பில் வேலை செய்துகொண்டிருந்தேன்.
எனது புத்தக அலமாரியில் புத்தகங்களைப் பார்வையிட்டபடி சுப்பையா பேசினார்: “நான் குடியிலிருந்து மீண்டு வந்தவங் களைப் பத்தி டாக்குமெண்ட் பண்ணிருக்கேன்… உங்க சேனலில் அவங்களை வெச்சு ரியாலிட்டி ஷோ பண்ணலாமான்னு சொல்லுங்க.”
“குடிகாரனோட கதைகள் எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கப்போகுது… என்ன சுவாரசியம் இருக்கும்?” “நீங்க அவங்களோட நிஜக்கதையைக் கேளுங்க. அப்புறம் நாம முடிவு செய்வோம்.” சுப்பையா முதலாவதாக குமாரின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதையைச் சொல்லத் தொடங்கினார். கண் முன்னால் சம்பவங்கள் காட்சிபூர்வமாக விரிந்தன.
குமாரின் முகத்தில் கொசுக்கள் கடித்துக்கொண்டே இருந்தன. பசியில் வயிறு எரிந்தது. அவிழ்ந்து கிடந்த கைலியை இறுக்கிப் பிடித்தபடி எழுந்து நிற்க முயன்றான். கால்கள் நிலைகொள்ளாமல் தடுமாறின. சாக்கடையோரத்தில் ஒற்றைச் செருப்பு மட்டும் கிடந்தது. குப்பைத்தொட்டி அருகில் நாய்கள் கும்பலாகக் கூடி குரைத்தபடி சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
அருகில் மதுக்கடையின் ஷட்டர் இறக்கிவிடப் பட்டிருந்தது. குமார் தள்ளாடித் தள்ளாடி நடந்து பிரதான சாலை வந்துசேர்ந்தான். போதையில் தலையும் கனத்து வலித்தது. வீட்டுக்கு எப்படிப் போவது என்று யோசித்தான்.
அந்தச் சந்தர்ப்பத்தில் குமார் அருகில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஆட்டோக்காரர் இறங்கித் தூங்குவாகை மரத்தை ஒட்டி ஒண்ணுக்கிருக்கப் போனார். குமார் ஆட்டோவின் முன்பு போய் நின்றுகொண்டான். ஆட்டோக்காரர் திரும்பி வந்ததும் குமாரை ஏற இறங்கப் பார்த்தார். “சவாரியா? “ஆமா.” “எங்க போகணும்?” குமார் இடத்தைச் சொன்னான்.