

ஆங்கீரச வருடத்தின் மாசி மாதம். பின்பனி குளிர் தொடங்கிய இரண்டாம் சாமத்தில் கோவில்பாளையம் நிசப்தமாகக் கிடந்தது. நாடக மன்றத்திலிருந்து நாடக விளம்பரச் சுவரொட்டிகளுடன் நாங்கள் மிதிவண்டியில் புறப்பட்டோம். அப்போது குமரேசன் மாப்பிள்ளையின் பாழடைந்த வீடுதான் எங்கள் நாடக மன்றம்.
திண்ணைத்தூண்களும் மேற்கூரைகளும் சரிந்த உள்தாழ்வாரத்தில் நாடக ஒத்திகை நடக்கும். கதை, நாடக ஆக்கம், வசனம், இயக்கம் எல்லாம் நான். இளவட்டங்களும் உள்ளூர்க்காரர்களுமே முதன்மை நடிகர்கள்.
இச்சுப்பட்டி மாரியம்மன் கோயில் சாட்டியதிலிருந்து நாடக ஒத்திகை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. மாரியம்மன் மாவிளக்குப் பூஜைக்கு முந்தைய நாள் இரவு எங்கள் நாடகம் ஊர் தலைவாசல் நாடகமேடையில் அரங்கேறும். சுற்றுவெளி ஊர்சனங்களும் திரண்டு வந்து கண்டு களிப்பார்கள்.
என் மிதிவண்டியில் சுவரொட்டிகளைப் பிடித்தபடி சுப்பிரமணி அண்ணன் ஏறி அமரத் தயாரானார். அப்போது அங்கு நின்றுகொண் டிருந்த சி.எஸ். மாமாவும் உடன் வருவதாகச் சொன்னார். ஏற்கெனவே எல்லா மிதிவண்டிகளும் வீதிகளில் புறப்பட்டுப் போய்விட்டன.
நான் வேறுவழியில்லாமல் இருவரையும் மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். சி.எஸ். மாமா அறுபது வயதைக் கடந்தவர். நல்ல அறிவாளி. எப்போதும் இளவட்டங்களோடு இருப்பவர். கோவில்பாளையத்தில் இருந்து தெற்கே சென்ற மண் சாலையில் மிதிவண்டிகள் வேகமெடுத் தன.
சுற்றுவெளி ஊர்கள் எங்கும் சனங்கள் விழித்தெழுவதற்கு முன் வீடுகளின் சுவர்களிலும் கதவுகளிலும் சுவரொட்டிகளை ஒட்டியாக வேண்டும். என்னுடைய மிதிவண்டி கடைசியாகத் தான் பயணித்தது. ஓடைக்கரை இறக்கத்தில் சுடுகாடு எதிர்ப்பட்டது. அதுவரை அமைதியாக மிதிவண்டியின் பின்புறம் அமர்ந்து வந்த சி.எஸ். மாமா பேசினார்.