

பார்த்திப வருடத்துக் கார்த்திகை மாதத்தின் குளிர்காலைப் பொழுது. என் மனைவியுடன் சகலையின் ஊருக்கு முதன்முறையாகப் பயணமானேன். எங்களுக்குத் திருமணம் முடிந்து பத்து நாள்களே கடந்திருந்தன. காங்கேயத்திலிருந்து நத்தக்காடையூர் செல்லும் வழியில் தென்னந்தோப்புக்கு இடையே சகலையின் தோட்டத்து வீடு இருந்தது.
சீமையோட்டு வீட்டின் கீற்றுப் பந்தல் வேய்ந்த காரைவாசல் கயிற்றுக் கட்டிலில் சகலையின்வயோதிகத் தந்தை உட்கார்ந் திருந்தார். எதிரே திண்ணையில் நான் உட்கார்ந்துகொண்டேன். மதியம் ‘பொண்ணு மாப்பிள்ளை விருந்து’ முடியும்வரை அவர்தான் எனக்குப் பேச்சு துணை. அவர் தன் வாழ்வில் நடந்த விசித்திரமான சம்பவங்களை ஓயாமல் சொல்லியபடி இருந்தார். அதிலொன்று எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அப்போது பிங்கள வருடத்துமார்கழி. பருவமழை கனத்துப் பொழிந்து மேய்ச்சல் குறுங்காடு களில் கொழுக்கற்றைப் புற்கள் முழங்கால் உயரத்திற்கு வளர்ந்துகிடந்தன. சகலையின் தந்தை மேய்ச்சலுக்காக அரச்சலூர் சந்தைக்குச் சென்று செம்மறிக்குட்டிகளை வாங்கி ஆள்காரருடன் ஊருக்கு ஓட்டி வந்துகொண்டிருந்தார். தோட்டத்தை நெருங்கும்போது உள்ளூரில் மூன்று மாதங்களாகக் கிடை கிடந்த கிழவி இறந்து விட்டதாகச் சேதி வந்தது.
அவர் அங்கிருந்தே இழவு வீட்டிற்குப் புறப்பட்டுப் போனார். இழவு வீட்டில் ஒப்பாரி ஒன்றும் பெரிதாக இல்லை. நடுவீட்டில் கிடத்தியிருந்த கிழவியைச் சுற்றிலும் பெண்கள் வெறுமனே உட்கார்ந்து கிடந்தனர். கிழவிக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும்.