

புதுக்கோட்டையில் ’அக்சா குளம்’ என்கிற பெயரில் ஒரு குளம் உள்ளது. இக்குளம் சந்தைப்பேட்டை மாட்டுச் சந்தையை ஒட்டி உள்ளது. இச்சந்தை வரலாற்றுச் சிறப்புமிக்கது.
தமிழகத்தில் வேறெந்த சந்தைக்கும் இல்லாத பெருமை புதுக்கோட்டைச் சந்தைக்கு உண்டு. சந்தை நடைபெறும்போது வரும் மாடுகள் தண்ணீரில்லாமல் தவித்து மயக்கமுற்று விழுந்து இறந்திருக்கின்றன.
இந்த உயிரிழப்பைத் தடுக்க முடியாமல் அன்றைய மக்கள் கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் திருமயம் ராமச்சந்திரபுரம் தி.நா.நாச்சியப்பர் மாடுகளின் தாகத்தைத் தணிக்க முன்வந்தார்.
சந்தைக்கு வெளியே ஒரு பெரிய மாட்டுத்தொட்டி கட்டி, அதில் தண்ணீர் நிரப்பி தர்மம் என்கிற பெயரால் மாடுகளின் தாகத்தைப் போக்கினார். இத்தொட்டியை 1912 இல் கட்டியவர், அத்தொட்டிக்கு அருகில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு நுழைவு வாயிலை எழுப்பினார்.