

கொல்லிமலையும் பச்சைமலையும் சூழ்ந்த சேலம் மாநகரிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் வந்துவிடுகிற தம்மம்பட்டி பேரூராட்சி, சுவேதா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பசுமையின் தொட்டில். மஞ்சள், வாழை விவசாயத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் பெயர் பெற்ற இந்த ஊரில் இறங்கினால், அங்குள்ள மரச் சிற்பக் கூடங்களிலிருந்து கேட்கும் உளிகளின் ஓசை உங்களுக்கு வேறொரு பெருமிதமான கதையைச் சொல்லும்.
இந்தியாவின் தொன்மையான கட்டிடக் கலை பாணிகளில் கருங்கல் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ‘கல் லிலே கலைவண்ணம் கண்ட’ நம் சிற்ப மரபில், கல்லுக்கு முன்பாக மரத்தைப் பயன்படுத்தி, கைவினையாகக் கடவுளர் சிற்பங்களை வடிக்கும் கலையில் தமிழர்கள் புகழ்பெற்று விளங்கினார்கள். இதற்குத் தமிழ்நாட்டின் பல ஊர்கள் இன்றைக்கும் சிறந்த சான்றாக விளங்குகின்றன.
இருப்பினும் தம்மம்பட்டி தேசிய அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் புகழ் பெற்று விளங்குகிறது. தம்மம்பட்டியில் வாழும் 70 குடும்பங் களைச் சேர்ந்த சுமார் 120 சிற்பக் கலைஞர்கள் தங்களின் முழுநேரக் கலைத் தொழிலாக மரச் சிற்பம் படைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
தம்மம்பட்டியின் மரச் சிற்பங்களின் அழகியல் நுட்பங்களும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் தனித்த பாணியாகப் பெயர்பெற்றுவிட்டதால், அவற்றுக்குக் கடந்த 2020இல் ‘புவிசார் குறியீடு’ கிடைக்கப் பெற்றது. இதனால் அத்தொழில் மேலும் சிறப்புப் பெற்று விளங்குகிறது.