

காணும் பொங்கலன்று பேரக் குழந்தையுடன் கோவை செம்மொழிப் பூங்காவிற்குச் சென்றது மிகவும் நிறைவான அனுபவமாக இருந்தது. வண்ணப்பூக்கள் கொண்ட பூந்தோட்டம், செயற்கை நீரூற்றுகள், விளையாட்டுக் கூடம், உடற்பயிற்சிக் கூடம், ஆங்காங்கே நிழல் தரும் மரங்களின் கீழே அமர்ந்து உரையாட இருக்கைகள் என எல்லாரையும் ஈர்க்கும் விதத்தில் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது! இந்தப் பூங்காவில் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவை, அமைதியாக உட்கார்ந்து வாசிக்க ஆறு இடங்களில் படிப்பகங்கள் அமைக்கப்பட்டிருந்ததுதான்!
கடை ஏழு வள்ளல்களின் பெயரில் சிற்பத் தோட்டம், மூலிகைத் தோட்டம், ரோஜாத் தோட்டம், மகரந்தத் தோட்டம், நறுமணத் தோட்டம், புதிர்த் தோட்டம் எனத் தோட்டங்களின் காட்சியகமும் நீர், நட்சத்திர, மியாவாகி, பாறை, செம்மொழி, ஆரோக்கிய வனம் என்கிற பெயர்களில் சிறுகாடுகளின் காட்சியகமும் பிரமாதமாக இருந்தன.