

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், அண்ணா சாலையின் நடுவே அமைந்திருக்கும் மிகப் பெரிய மசூதியைப் (ஷியா அஷுர்கானா) பார்க்கும்போதெல்லாம், ஒருமுறை உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும். அந்த எண்ணம் மொஹரம் பண்டிகைக்கு முதல் நாள் இரவு, கோம்பை அன்வர் ஏற்பாடு செய்திருந்த மரபுநடை மூலம் நிறைவேறியது.
இரவு 7.30 மணிக்கு அஷுர்கானாவில் ஒன்றுகூடினோம். ஒரு பாட்டில் தண்ணீரும் ஓர் அத்தர் பாட்டிலும் கொடுத்து வரவேற்றனர். வெளிநாட்டினரும் இந்த மரபுநடையில் பங்கேற்றதால் ஆங்கிலத்தில் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது.