

தந்தி சேவை என ஒன்று அஞ்சலகத்தில் இருந்ததையும் சில ஆண்டுகளுக்கு முன் அது நிறுத்தப்பட்டதையும் அறிவோம்.
திருமணத்திற்கு வாழ்த்துத் தந்தி அடிக்கும் (அனுப்பும்) வழக்கம் தொண்ணூறுகள்வரை இருந்தது. கடிதத்தில் வாழ்த்துத் தெரிவித்தால், ‘நாலணா கவரில் எழுதிப் போட்டுவிட்டார்.
ஒரு வாழ்த்துத் தந்தி அடிக்கக் கூடாது?’ என்று சொல்லும் வழக்கம் இருந்தது. அதனால் திருமணம் என்றால் வாழ்த்துத் தந்திகள் குவியும். பெரும்பாலும் தந்திகள் இறப்புச் செய்தியைக் கொண்டுவந்ததால், தந்தியைக் கொண்டு வருபவரை ஒருவித பயத்துடன் பார்க்கும் வழக்கம் இருந்தது. வாழ்த்துத் தந்தியாக இருந்தால், யார் அவரை எட்டிப்பார்த்தாலும், ‘வாழ்த்துத் தந்தி’ என்று சொல்லிக்கொண்டே செல்வார்.