

விளைகிற இடத்தில் ‘தக்காளி கிலோ 10 ரூபாய்’ என்ற செய்தியை பார்த்துவிட்டு, வீட்டருகில் இருக்கும் கடையில், ‘ஏன் கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறீர்கள்?’ என்ற கேள்வி கேட்பவர்கள் உண்டுதானே. அவர்கள் யோசிக்காதது, ‘என்னால் அந்தக் கிராமத்துக்குப் போய், எனக்குத் தேவையான அரைக் கிலோ தக்காளி மட்டும் வாங்கிக்கொண்டு வந்து, அதன் பிறகு குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓட முடியுமா?’ என்பதுதான்.
தக்காளி, விளையும் இடத்திலிருந்து கூடைகளில் கோயம்பேடு போன்ற மொத்த சந்தைக்கு லாரியில் வரவேண்டும். அவற்றை இறக்கி வைத்துப்பின், விடிகாலைக்கு வெகுநேரம் முன்பே தூக்கத்தைத் துறந்து, மொபெட்டுக்குப் பெட்ரோல் போட்டு, சில கிலோ மீட்டர் வண்டி ஓட்டி, கோயம்பேடு கடைக்கு வந்து, கூட்டத்தில் காத்து நின்று, நம் வீட்டருகில் இருக்கும் சிறு கடைக்கு அதில் ஓரிரு கூடைகளை ஒருவர் கொண்டு வரவேண்டும்.
அவர், வாடகைக்கு கடைபிடித்து, அதில் தக்காளியை விற்பனைக்கு வைக்க வேண்டும். வாங்க வருகிறவர்கள், ஒவ்வொன்றையும் புரட்டி, அழுத்திப் பார்த்து, நல்லதாக பொறுக்கி எடுத்துக்கொண்டு போன பின் மீறும் சுமாரான மற்றும் அழுகத் தொடங்கும், விலை போகாத தக்காளிகளின் நட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படி பலரும் உழைத்து, செலவு செய்தால் மட்டுமே, தூங்கி எழுந்து, கட்டிய லுங்கி அல்லது நைட்டியுடன் அப்படியே நாலு எட்டுப் போய், கால் கிலோ தக்காளி வாங்க முடியும். விளையும் இடங்களுக்கும், கிடைக்கும் கடைகளுக்கும் இடையில் எவ்வளவு தூரம், எவ்வளவு வேலைகள், எவ்வளவு பேர், எவ்வளவு செலவு செய்தால் வாங்குபவர்க்கு அருகில் அவை கிடைக்கும்! அவற்றை யார் கொடுப்பது? அவையெல்லாம் சேர்ந்ததுதான் சில்லரை விலை (ரீடெயில் பிரைஸ்). அவர்கள் செய்யும் செலவு, அவர்களது உழைப்பு மற்றும் சிந்தனை ஆகியவை இலவசமல்ல. அவற்றுக்கும் விலை மதிப்பு உண்டு.