

“வீட்டுக் கடன் இருக்கிறது... கையில் கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது... உடனே கடனை அடைத்து விடலாமா? அல்லது அந்தப் பணத்தை முதலீடு செய்யலாமா?” நடுத்தரக் குடும்பங்கள் அதிகமாக கேட்கும் நிதி சார்ந்த கேள்விகளில் இதுவும் ஒன்று.
பல நடுத்தர மற்றும் உயர் நடுத்தரக் குடும்பங்கள், 15 முதல் 25 ஆண்டுகள் வரை வீட்டுக் கடனில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது, ‘கடன் இல்லாமல் வாழ்வதே நிம்மதி’ என்கிற எண்ணம் மனதில் எழுவது உண்மைதான்.
ஆனால் வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் வட்டியைவிட, கையில் இருக்கும் பணத்தை வைத்து அதிகம் சம்பாதிக்கிற வாய்ப்பு இருப்பதால், இந்தச் சிந்தனையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது.
அதாவது, வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைப்பதால் கிடைக்கும் நன்மை என்ன? அதே பணத்தை வேறு இடத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன் என்ன? அதுதான் முக்கியமான கேள்வி.
முதலில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டுக் கடன் என்பது ‘கெட்ட கடன்’ அல்ல. வீடு ஒரு சொத்து. காலப்போக்கில் அதன் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளதால், அது ‘நல்ல கடன்’ தான்.
மேலும், சில வகையான வீட்டுக் கடன்களில் - செலுத்தும் வட்டிக்கு, வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். சரி... வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்கலாமா? வேண்டாமா? என்கிற கேள்விக்கான விடையை 2 உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.
உதாரணம் 1:
சென்னை ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் குடும்பம்.
வீட்டுக் கடன்: ரூ.60 லட்சம்
வட்டி: 8.5%
காலம்: 20 ஆண்டுகள்
இஎம்ஐ: ரூ.52,000
5 ஆண்டுகள் இஎம்ஐ கட்டிய பிறகு, அவர்களிடம் ரூ.5 லட்சம் சேமிப்பு வந்தது.
அவர்களின் கேள்வி: ‘இந்த ரூ.5 லட்சத்தை வைத்து கடனைக் குறைக்கலாமா?’ ‘குறைக்கலாம்’ என்பதே சரி. ஏன்?