

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவில் தங்க நகை வாங்கி பயன்படுத்தும் மக்கள் மிக அதிகம். தங்கமும், வெள்ளியும் இன்றைக்கு பல குடும்பங்களுக்கு அசையும் சொத்தாக, வாழ்வின் ஒரு அங்கமாக இருப்பதுதான் உண்மை. இந்த நிலையில் தங்கம், வெள்ளியின் விலை ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
1 பவுன் தங்கத்தின் விலை (ஜன. 25) ரூ.1,18,000 (ஒரு கிராம் ரூ.14,750) ஆக உயர்ந்து உள்ளது. இதே நாளில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.3 லட்சத்து 65 ஆயிரமாகவும், 1 கிராமின் விலை ரூ. 365 ஆக உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 பவுன் தங்கம் நகை விலை ரூ.2 லட்சம் வரையிலும் ஒரு கிலோ வெள்ளியின் விலையும் ரூ.5 லட்சம் வரையிலும் உயரும் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்கம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடும் நிலை உருவாகி வருகிறது. தங்க நகை வாங்குபவர்கள் விலை யேற்றத்தால் எந்தளவு தலைசுற்றலுக்கு ஆளாகிறோர்களோ, அதே நிலைமை இன்றைக்கு இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.