

இந்தியாவைச் சேர்ந்த சிறுவர்கள் வெறும் நுகர்வோராக மட்டும் இல்லாமல், நிதி மேலாண்மையில் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாக வளர்ந்து வருகின்றனர். குறிப்பாக, 10-ல் 7 சிறுவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைக் கண்டறிய ஆர்வம் காட்டுகின்றனர்.
அதே நேரம், மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் அப்பா, அம்மா மற்றும் தங்களது சொந்த பந்தங்கள் கொடுக்கும் ‘பாக்கெட் மணியைச் செலவிடாமல் சேமிக்க விரும்புவது அண்மையில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
வென்ச்சர் கேபிடல் நிறுவனமான ருக்கம் கேபிடல் ‘ஜென் ஆல்பா டீகோடட்' என்ற சர்வேயை மேற்கொண்டது. அதில், இன்றைய இளம் தலைமுறையினர் 16 வயது வரையுள்ள சிறுவர்களின் நிதி சார்ந்த மனநிலை குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
நிதி விழிப்புணர்வு
முந்தைய தலைமுறையினரை விட, இப்போதைய சிறுவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் அதிகத் தெளிவு கொண்டுள்ளனர். இவர்களின் நிதி சார்ந்த பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் பெற்றோர்களைப் பார்த்தும், அவர்களின் சொந்த ஆர்வத்தினாலும் உருவாகிறது.
சுமார் 31 சதவீத சிறுவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பாக்கெட் மணியில் பெரும் பகுதியை அநாவசியமாக செலவழிக்காமல் சேமிக்கவே விரும்புகின்றனர். அதேநேரம், 25 சதவீதம் பேர் செலவு செய்வதற்கு முன்னால் தங்களது பெற்றோரிடம் அனுமதி பெற விரும்புகின்றனர்.