

இந்தியர்களுக்கு தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல—பண்பாடு, பரிசளிப்பு, மற்றும் நிச்சயமான மதிப்பு சேமிப்பு என்ற மூன்றையும் இணைக்கும் ஒரு முக்கிய சொத்து.
ஆனால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்ட நிலையில் வெளிப்படையான விலை, பாதுகாப்பான சேமிப்பு, மற்றும் சிறிய அளவில் முதலீடு செய்யும் வசதி போன்றவற்றை முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.
முதலீட்டாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், ஈஜிஆர் (Electronic Gold Receipt) என்று அழைக்கப்படும் மின்னணு தங்க ரசீதுகள் தேசிய பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கமாடிட்டி எக்ஸ்சேஞ்களில் வர்த்தகமாகும் தங்கத்தை டெலிவரி எடுக்கும் முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் அதிலிருந்து இது வேறுபடுகிறது. குறிப்பாக கமாடிட்டி எக்ஸெசேஞ்சகளில் சிறு முதலீட்டாளர்கள் வாங்க முடியாது. ஈஜிஆர் என்பது தங்கத்தின் உரிமையை குறிக்கும் ஒரு டிஜிட்டல் ஆவணம்.
இது இன்னும் முழுமையாக விற்பனைக்கு வரவில்லை. குரோ, ஜெரோதா, ஏஞ்சல் ஒன் உள்ளிட்ட தளங்களில் பங்குகள் அல்லது பத்திரங்களைப் போல வாங்கி விற்பதற்கான வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஜிஆர்-ன் முக்கிய நன்மைகள்
* நகைக் கடைகளில் விற்கப்படும் தங்கத்தின் விலை ஊருக்கு ஊர் வேறுபடும். ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையில் (Uniform Pricing) தங்கம் வாங்கலாம்.
* பங்குச் சந்தையில் எளிதாக வாங்க / விற்க முடியும்.
* தங்கமாக வைத்திருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் சுலபமானது.
* தங்கத்தின் தரம் உறுதி செய்யப்பட்டிருக்கும்.
* எப்போது வேண்டுமானாலும் பணமாகவோ தங்கமாகவோ மாற்றிக் கொள்ளும் திறன் உள்ளது.