

`பிரிக்ஸ்' உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை தங்கள் டிஜிட்டல் நாணயத்தை இணைக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு யோசனையை முன்வைத்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள `பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதிக்குமாறு ஆர்பிஐ பரிந்துரை செய்துள்ளது.
டிஜிட்டல் நாணயம் என்பது வங்கி மூலம் வரும் மின்னணு பணம். இது காகித ரூபாய் போல இல்லாமல், முழுக்க டிஜிட்டலாக இருக்கும். அரசே இதைக் கண்காணிக்கும், சாதாரண ரூபாய் போலவே மதிப்புடையது. எளிமையாகச் சொன்னால், இது உங்கள் கூகுள்பே, வாட்ஸ்அப் பே போன்ற டிஜிட்டல் வழி பணப் பரிவர்த்தனைதான்.
ஆனால் பல நாடுகளுக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்தத் திட்டம் சாதாரண மக்களுக்கு பல வழிகளில் பயனளிக்கும். வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவது மிகவும் எளிதாகும். குறைந்த கட்டணத்தில் வேகமாக பணம் சென்றடையும்.
அரசு கண்காணிப்பதால் இது மிகவும் பாதுகாப்பானது. கமிஷன் செலவு குறையும். வர்த்தகத்தின் பார்வையில் பார்த்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே வியாபாரம் செய்வது மிகவும் எளிதாகும். அமெரிக்க டாலரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும். பணப் பரிமாற்றம் மிக வேகமாக நடைபெறும்.