

கணினி என்றாலே துல்லியம். அப்படியொரு காலம் இருந்தது. அது செய்யறிவுக்கு முந்தைய காலம் (செ.மு.). செ.பி. யுகத்தில் கணினிகள் உளறத் தொடங்கியிருக்கின்றன. மனிதர்களைப் போலவே. இவ்வாறான செய்யறிவு உளறல்களை `ஹாலுசினேஷன்' என்கிறார்கள்.
மதிமயக்கம். மதியும் மயக்கமும் மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்தன. இப்போது அவற்றுக்கும் போட்டி வந்துவிட்டது.
சாட்ஜிபிடி போன்ற செய்யறிவுக் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவருமே இந்த உளறல் தரிசனத்தை எதிர்கொண்டிருப்பர். ஏன் இந்த மதிமயக்கம்? காரணங்கள் என்ன? தவிர்க்க முடியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
சாட்ஜிபிடி, ஜெமினி போன்றவை பெரு மொழி மாதிரிகள் (Large Language Models-LLM). இவற்றின் அடிப்படை உத்தி எளிமையானது. அது அடுத்த சொல் என்னவென ஊகிப்பது. ஓர் உதாரணம். இந்தியாவின் தலைநகரம் என்று இரண்டு சொற்களைக் கொடுக்கிறீர்கள். அடுத்த சொல் என்னவாக இருக்கும்? புதுதில்லி.
தலைநகர உதாரணத்தில் குழப்பமில்லை. ஆனால் அனைத்துத் தருணங்களிலும் இவ்வாறே சிக்கலின்றி இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதுபோன்ற தருணங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும். எதையாவது சொல்லிவைக்கும்.
மதிமயக்கம் நிகழ்வதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். செய்யறிவு மாடல்களுக்குத் தன்னம்பிக்கை மிகவும் அதிகம். எனக்கு இது தெரியாது என்று சொல்லாது. தனக்கு விடை தெரியாத வேளைகளில் எதையாவது சொல்லிவைக்கும்.
தேர்வுக்குப் படிக்காமல் வந்துவிட்ட மாணவன் ஒருவன் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையெழுதுவது போன்றது இது. ஓர் ஆசிரியராக இருந்தால் நீங்களும் இதை உணர்ந்திருப்பீர்கள்.