உலக அளவில் ராணுவத்துக்கான செலவினம் அதிகரித்துள்ளது ஏன்?

உலக அளவில் ராணுவத்துக்கான செலவினம் அதிகரித்துள்ளது ஏன்?

Published on

2022-ம் ஆண்டு நிலவரப்படி ராணுவத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புக்கான ஒதுக்கீடு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இது 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகம் ஆகும்.

சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி, ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் அமெரிக்கா 877 பில்லியன் டாலர் (ரூ.72 லட்சம் கோடி) ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள சீனா 292 பில்லியன் டாலரும் (ரூ.24 லட்சம் கோடி) மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யா 86.4 பில்லியன் டாலரும் (ரூ.7.06 லட்சம் கோடி) ராணுவத்துக்கு செலவிட்டுள்ளன. உலக அளவில் ராணுவத்துக்கான செலவினத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு 52 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ஓராண்டு கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதனால், நாடுகள் ராணுவத்துக்கு செலவிடும் தொகை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இதனால் ராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in