Last Updated : 05 Jan, 2015 02:36 PM

 

Published : 05 Jan 2015 02:36 PM
Last Updated : 05 Jan 2015 02:36 PM

துணிவே தொழில்: மாஸ்டர் மைண்ட் குழுவை உருவாக்குவது எப்படி?

எல்லா தொழில் முனைவோருக்கும் வெற்றிகரமான அணி அமைய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அத்தகைய குழுவை தொடக்கத்திலேயே தேர்வு செய்து உருவாக்கிவிட்டால் உங்கள் எண்ணம் ஈடேறும். சிறப்பான குணங்கள், உணர்ச்சிகள் அடிப்படையிலான குணங்கள், நிறுவன கலாசாரத்துக்கு ஏற்ற குணங்கள் இந்த மூன்று குணங்களைக் கொண்ட பணியாளர்களை அடையாளம் காண வேண்டும்.

சிறப்பு குணம் கொண்டவரிடம் வேலை சார்ந்த அறிவு அபரிமிதமாக இருக்கும். விளம்பர வடிவமைப்பாளர் பணிக்கு நீங்கள் பணியாளரை தேடுவதாக வைத்துக் கொள்வோம். விளம்பர வடிவமைப்பில் மிகச் சிறந்த கற்பனை வளம் உள்ளவராகவும், தொழில்நுட்ப அறிவுமிக்கவராகவும் இருத்தல் அவசியம்.

இத்தகையோருக்கு தொடர்ந்து பணிகள் அளித்து அவரது திறமையை அறிந்து கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் நிறுவனத்துக்கு விற்பனை பிரதிநிதி தேவையெனில், உங்கள் தயாரிப்பை எவ்விதம் விற்பனை செய்வார் என்று நீங்கள் நேர்முகத்தேர்வின் போது கேட்கலாம்.

சக பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதோடு, பொறுப்பேற்கும் தன்மை மிக்கவராக இருப்போரையும் நீங்கள் அடையாளம் காண வேண்டும். இத்தகையோரிடம் பணிச் சூழலில் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதே நேரடியாக அறிந்து அதன் பிறகு முடிவு செய்யலாம். வேலையில் நேரடியாக ஈடுபடுத்துவதன் மூலம் ஒவ்வொருவரின் குண நலன்களை கண்கூடாகக் காண முடியும்.

கலாசார ரீதியில் பொருந்தக் கூடிய நபர்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடக் கூடியவர்கள். இத்தகையோரையும் நேரடி கள ஆய்வு மூலமே உணர முடியும். எனவே இதற்கு ஏற்ற வகையில் உங்களது நேர்முகத் தேர்வை வடிவமைக்க வேண்டும். அப்போதுதான் உங்களது அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற மாதிரியான நபர்களைத் தேர்வு செய்ய முடியும்.

உரிய பணியாளர்களைத் தேர்வு செய்வது என்பது அனைத்து நிறுவனத் துக்கும் மிகவும் சவாலான பணிதான். 5 சதவீத பணியாளர்கள்தான் உங்களுக்கு ஏற்ற மாதிரி அமையக் கூடும். உரிய நபர்களைத் தேர்வு செய்வதற்கு பல நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டியதிருக்கும். பணியாளர்களை தேர்வு செய்ய சில எளிய வழிகள்:

தொழில்துறையில் உங்களது நண்பர்கள், இத்துறையைச் சேர்ந்தவர்கள் மூலமாக சிறந்த பணியாளர்களைத் தேடலாம். இப்போதைய பணிச் சூழலில் அதிருப்தியடைந்த, அதேசமயம் சிறந்த பணியாளருக்கு வாய்ப்பை அளிக்க தயாராக இருப்பதாகக் கூறலாம்.

ஃபேஸ்புக், லிங்க்டின் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவர்களைத் தேடலாம்.

கல்லூரி முடித்து வேலை தேடுவோரை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் செலவு குறையும். ஆனால் சிறந்த பணியாளராக அவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இருப்பினும் இத்தகையோர் தொழிலைக் கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதனால் இவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது.

உங்களிடம் உள்ள பணியாளர் மூலம் மற்றொரு பணியாளரை தேர்வு செய்யலாம். இதன் மூலம் தொழில் திறன் கொண்டவர்கள் உங்கள் நிறுவனத்துக்குக் கிடைக்கலாம். சிறந்த பணியாளரை அடையாளம் கண்டுவிட்டால் அவரை நீங்கள் வாங்க தயாராகுங்கள்.

போட்டி நிறுவனம் அளிக்கும் சலுகை, சம்பளத்தை விட நீங்கள் அதிகம் தரத் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்களுடைய நிறுவனம் ஆரம்ப நிலையில் இருந்தால் உங்களால் அதிக சம்பளம் அளிக்க இயலாது. இருப்பினும் சில சலுகைகளை அளிக்கலாம். இது தொழில் வளர உதவும்.

உரிய வேலை

சரியான ஊழியருக்கு உரிய பதவி அளிக்கப்பட வேண்டும். உங்களிடம் உள்ள ஊழியருக்கு மிகச் சிறந்த தகவல் பரிமாற்ற திறமை இருப்பதாக வைத்துக் கொள்வோம், அத்தகையோர் எந்த பணியையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பர். இத்தகையோரின் செயல்பாடுகளை ஓரளவு திருத்தினாலே அது மிகச் சிறப்பாக அமையும்.

இத்தகையோரை அவரது விண்ணப்பப் படிவத்தில் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் அடையாளம் காணலாம். இத்தகையோரை விளம்பரத்துக்கான உத்திகளை வகுக்கும் பிரிவில் சேர்ப்பதைவிட விற்பனை சார்ந்த பிரிவில் சேர்ப்பது பயனளிக்கும்.

விண்ணப்பத்தின் அடிப்படையில் சரியான பணியாளரை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்துவம் மிக்க நபர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை அடையாளம் காண்பதுதான் உங்களின் முன்பாக உள்ள சவாலாகும்.

கே.சுவாமிநாதன்
aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x