

இந்தியாவில் மனித–யானை எதிர்கொள்ளல் காட்டுயிர்ப் பாதுகாப்பின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மனித–யானை எதிர்கொள்ளலால் 2,500-க்கும் மேற்பட்ட மனிதர்களும் 500-க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கைகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவை சம்பந்தப்பட்ட குடும்பங்களின் துயரத்தையும் ஓர் இனத்தின் உயிர்வாழ்வுக்கான போராட்டத்தையும் பிரதிபலிக்கின்றன.
தங்களது வளர்ச்சிக்காகச் சாலைகள், ரயில் பாதைகள், நகரங்கள், தொழிற்சாலைகளை மனிதர்கள் உருவாக்குகின்றனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிலோமீட்டர் சாலைகளும் ஆயிரக்கணக்கான பாலங்களும் மனிதர்களின் பயணத்தை எளிதாக்கியிருக்கின்றன.
சாலை என்பது மனிதர்களுக்கு இணைப்பின் அடையாளம். ஆனால் அதே சாலை, ஒரு யானையின் பார்வையில் தடையாகவும் பிரிவினையாகவும் மாறுகிறது.