

வேங்கை மரக் காய்கள் | படம்: லலிதாம்பா |
வேங்கை மரங்களில் இரண்டு வகைகள் எங்கள் காட்டில் உள்ளன. அவை வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. ஆனாலும் வறட்சியில் இரண்டு சந்தன வேங்கை மரங்கள் காய்ந்துவிட்டன.
சந்தன வேங்கை: இது உதிர வேங்கை, செஞ்சந்தனம் என்கிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது வீட்டின் முன்புறம் உயர்ந்தும் பரந்தும் வளர்ந்துள்ளது. இதன் தண்டில் சிறிதாகக் கீறினால், அதிலிருந்து ஒழுகும் பால், குருதி வண்ணத்தில் கசியும்.
அதனால் உதிர வேங்கை என்கிற பெயர் வழங்குகிறதோ? அந்தப் பாலைச் சிறு குழந்தைகளுக்குப் பொட்டு வைப்பதற்காக எடுத்துவைப்பார்கள். நாங்கள் முதலில் உதிர வேங்கை, சந்தன வேங்கை ஆகிய இரண்டும் இரு வேறு மரங்களென நினைத்தோம்.
ஆனால், நண்பர் பூச்சியியலாளர் சிவகுமார் இரண்டும் ஒன்றே எனச் சொல்லி மரத்தைச் சிறிது கீறி எங்களுக்குக் காட்டினார். மு.வரதராசனார் எழுதிய ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்கிற நூலையும் அவர் கொடுத்தார்.
சங்க இலக்கியக் காட்சி
சங்க இலக்கியத்தில் வேங்கை இடம்பெற்ற பாடல்களை அந்நூல் விளக்குகிறது. பாலை நிலக் காட்சியைக் கீழ் வருமாறு பரணர் வழங்குகிறார்:
யாழ்வல்ல இளைஞர் சிலர் பல்வகை இசைக் கருவிகளின் துணைகொண்டு கடவுளை வணங்கிப் பாடினர்.
ஏதோ நினைவில் மயங்கியிருந்த யானையின் செவிகளில் பட்டது அவ்வோசை. பாடலோசையைப் புலியின் ஓசையென மயங்கியுணர்ந்த யானை, அண்மையில் பூத்துப் பொலிவுடன் இருந்த வேங்கை மரத்தைப் புலியெனக் குத்தித் தாக்கிற்று.