

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இயற்பியல் ஆராய்ச்சிகள், உயிரியல் ஆராய்ச்சிகள் ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பில்லா தவையாக இருந்தன. ஆனால் சமீபகாலமாக இயற்பியல், வேதி யியல் கோட்பாடுகள் உயிரியல் ஆராய்ச்சிகளில் அதிகப் பங்களிப்பை வழங்குகின்றன.
இயற்பியலின் புகழ்பெற்ற குவாண்டம் கோட்பாடு (quantum theory) அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இக்கோட்பாடு உருவான தொடக்கக் காலக்கட்டத்தில் அணுக்கள், மூலக்கூறுகள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், குவார்க்குகள் என இயற்பியல் சார்ந்து மட்டுமே அது புரிந்துகொள்ளப்பட்டது.
குவாண்டம் கோட்பாடுகள் தற்போது உயிரியல் துறையிலும் நுழைந்து, இதுவரை விடை கிடைக்காத பல்வேறு உயிரியல் ஆராய்ச்சிக் கேள்விகளுக்குப் புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கின்றன. இன்றைக்கு குவாண்டம் உயிரியல் (Quantum Biology) உலக அளவில் மிக முக்கியமான ஆராய்ச்சித் துறை. குவாண்டம் உயிரியலின் முக்கிய ஆராய்ச்சி ஒளிச்சேர்க்கை குறித்தது.
ஒளிச்சேர்க்கையும் குவாண்டமும்
ஒளிச்சேர்க்கைச் செயல்பாட்டில் சூரிய ஒளி ஆற்றலைத் தாவரங்கள் வேதி ஆற்றலாக மாற்றுகின்றன. இலைகளில் குளோரோபிளாஸ்ட் (chloroplast) என்னும் செல்நுண்ணுறுப்பு உள்ளது. இந்த குளோரோபிளாஸ்ட்டின் உள்ளே தைலகாய்டு என்னும் வட்டத்தட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வட்டத்தட்டுகள் குளோரோபில் என்னும் பச்சை நிறமி மூலக்கூறுகளால் ஆனவை. இந்த குளோரோபில் மூலக்கூறுகள்தான் சூரியஒளி ஆற்றலை வேதிஆற்றலாக (குளுகோஸ்) மாற்றுவதில் முக்கியப் பங்குவகிக்கின்றன.